பாலிங், ஜூன் 18-
3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உடல்சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கெடா, பாலிங், ஜாலான் பாரிட் பஞ்சாங்-ங்கிலுள்ள கம்போங் பாகோங்-ங்கில் நேற்று அந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் உயிரிழந்தவர் தொழிற்சாலை பணியாளரான 29 வயது முஹம்மது ஹபிசுதீன் ஹாஷிம் என அடையாளம் கூறப்பட்டது.
கம்போங் அசாம் ஜாவா-விலிருந்து பாரிட் பஞ்சாங்-ங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, அவ்வாடவர் செலுத்திய மோட்டார்சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து முன்சென்றுக்கொண்டிருந்த பெரோடுவா பெஸ்ஸா வாகனத்தின் பின்புற பகுதியை மோதியது.
அதில், மோட்டார்சைக்கிளிலிருந்து சாலைக்கு நடுவே அவ்வாடவர் சுழன்று விழுந்த போது, எதிர்திசையிலிருந்து வந்த புரோட்டான் பிரீவ் வாகனமோட்டி அவரை மோதினார்.
தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, பாலிங் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பர்ந்தேண்டன் ஷம்சுதீன் மாமத் தெரிவித்தார்.
இதர இரு வாகனமோட்டிகள் காயங்களின்றி உயிர் தப்பிய வேளை, அச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஷம்சுதீன் கூறினார்.








