கோலாலம்பூர், ஆகஸ்ட் 05-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மிட் மரணம் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் மற்றும் இதர மூன்று தரப்பினருக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விசாரணை தேதியை அறிவித்துள்ளது.
19 வயதுடைய அந்த டச்சுக்காரப் பெண், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர், Persiaran Capsquare, City Centre – லில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 20 ஆவது மாடியிலியிலிருந்து 6 ஆவது மாடியில் கீழே விழுந்து, நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது ஒரு விபத்து என்று மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் அந்த தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அந்த இளம் பெண் மரணம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்வதற்கு ஓர் உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டத்துறை அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாடல் அழகியின் தாயார் கிறிஸ்டினா கரோலின், தமது மகளின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீஸ் துறை தனது கடமையை செய்யத் தவறிவிட்டது என்று கூறி, போலீஸ் படைத் தலைவர், மலேசிய அரசாங்கம் உட்பட மூன்று தரப்பினருக்கு எதிராக இந்த சிவில் வழக்கை தொடுத்துள்ளார்.








