நீலாய், ஜனவரி.07-
நெகிரி செம்பிலான், நீலாயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 10 வயது சிறுவன், சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு கணவன், மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுவனின் சொந்தத் தாயார் என்று நம்பப்படும் 30 வயது மாதுவும், அந்த சிறுவனின் வளர்ப்புத் தந்தையான 22 வயது மதிக்கத்தக்க ஆடவரும் நேற்று நீலாய் போலீஸ் தலைமையத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் கைது செய்யப்பட்டனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் நீலாய், Star Valley Nilai-யில் உள்ள ஒரு பல்பொருள் விற்பனை கடையின் வளாகத்தில் சிறுவன் ஒருவன் பயத்தால், உடல் நடுங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட உணவு விநியோகப் பணியாளர் ஒருவர், இது குறித்து போலீசுக்குத் தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
சிறுவனின் உடலைப் பரிசோதனை செய்த போது, சித்ரவதை செய்யப்பட்டதற்கு அடையாளமாக உடல் முழுவதும் ரணமாக இருந்ததாக ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
அந்தச் சிறுவன் உடனடியாக சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவனது தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








