பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அவர்களுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 41 வயது நுர்ஹஸ்வானி அஃப்னி என்ற மாது, தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சமர்ப்பித்த மனு மீதான முடிவு வரும் மே 14-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்ற பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, ஈப்போ நகர மண்டபத்தின் முன், சுல்தானைத் தாக்க முயன்றதாக நுர்ஹஸ்வானி அஃப்னி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை மீட்டுக் கொள்ளுமாறு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்னும் பரிசீலனையில் உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நொரிசான் ரிடுவான் இந்த வழக்கின் அடுத்தகட்ட நிலவரத்தை அறிய மே 14-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 352- பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மாதுவிற்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.








