சிலாங்கூரில் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் தமது தொகுதி பதவியை இழக்கப் போவதில்லை என, சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டதாகவும், யாரும் தங்களது பதவியை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகின. எனினும், பின்னர் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.
இதனிடையே, சட்டமன்றக் கூட்டங்களில் அடிக்கடி கலந்துகொள்ளாத உறுப்பினர்களின் பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் லாவ் தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு சுமார் மூன்று முறை மட்டுமே நடைபெறுவதால், உறுப்பினர்கள் தங்களது வருகைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காலை அமர்வுக்கு 200 ரிங்கிட்டும், பிற்பகல் அமர்வுக்கு 150 ரிங்கிட்டும் வருகைப் படி வழங்கப்படுவதாகவும் லாவ் உறுதிப்படுத்தினார்.








