கோலாலம்பூர், பிப்ரவரி.23-
பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யை மீண்டும் அறிமுகப்படுத்தாமல் இருப்பது, அதனை மீண்டும் செயல்படுத்துவதை விட, அதிக அரசியல் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் முன்னாள் துணையமைச்சர் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாவிட்டால், அரசாங்கம் பிற வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது விரிவுபடுத்தவோ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டெய்லர் பல்கலைக்கழகத்தில் தற்போது துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் ஓங், தற்போதைய அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை ஆதரித்த கூட்டணிக் கட்சிக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு பாரிசான் நேஷனல் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி பகிரங்கமாக ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அது சாத்தியமே என்றும் ஓங் கியான் மிங் விளக்கமளித்துள்ளார்.








