May 22, 2026
Thisaigal NewsYouTube
உணவுகளின் விலைகளை நிலைநிறுத்த, அடிப்படை பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும்! கோரிக்கை விடுத்தது PRESMA
தற்போதைய செய்திகள்

உணவுகளின் விலைகளை நிலைநிறுத்த, அடிப்படை பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும்! கோரிக்கை விடுத்தது PRESMA

Share:

அண்மையில், முட்டைகளின் விலைகளை குறைத்து அரசாங்கம் அறிவிப்பை செய்திருந்தாலும், உணவகங்களில் உணவுகளின் விலைகளைக் குறைப்பதற்கு அது எவ்வகையிலும் துணைப்புரியவில்லை.

நடப்பில், இதர பொருட்களின் விலை உயர்வை, தாங்கள் எதிர்கொண்டு வருவதாக, மலேசிய முஸ்லிம் உணவக நடத்துநர்கள் சங்கம் - PRESMA-வின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தைப் கான் தெரிவித்தார்.

உணவுகளின் விலைகளை குறைப்பது குறித்து தாங்கள் பரிசீலிப்பதற்கு ஏதுவாக, அரசாங்கம் அடிப்படை பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றாரவர்.

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசல் உதவித் தொகையை அளிக்கும் திட்டம் அமலாக்கம் கண்டதை அடுத்து, உணவகங்களுக்கு மூல பொருட்களைக் கொண்டுவரும் வாகனங்களுக்கான செலவுகள் கவலையளிக்கின்ற வகையில் உள்ளன.

அடிப்படை பொருள்களின் விலைகளை அரசாங்கம் குறைக்குமானால், தங்கள் தரப்பு உணவுகளுக்கான நடப்பு விலைகளை நிலை நிறுத்தும். அல்லது குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அடிப்படையில் உணவுகளின் விலைகளை உயர்த்தாது என ஜவஹர் அலி கூறினார்.

நடப்பில், உதவித் தொகை வழங்கப்பட்ட டீசலுக்கான கட்டுப்பாட்டு முறை - SKDS வாயிலாக 33 வகை பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு FLEET அட்டை வழங்கப்பட்டுள்ளன.

அதன் வழி, அவர்கள் உதவித்தொகை வழங்கப்பட்ட டீசலைப் பெறும் வேளை, SKDS-சில் மேலும் இதர வகை வாகனங்களை சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சு இதற்கு முன்பு கூறியிருந்தது.

Related News