ஜோகூர்பாரு, நவ. 26-
ஜோகூர் மாநிலத்தில் ஒழுங்கீன நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியாக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஜோகூர்பாருவிலும், பத்து பஹாட்டிலும் உள்ள 16 வளாகங்களில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
கேளிக்கை மையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட 174 பேரில் உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது ஆடவர்களும், மூன்று பெண்களும் அடங்குவர்.
தவிர வியட்நாம், மியன்மார், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் முதலிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 133 அந்நியப் பெண்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். முறையே, 93 வியட்நாம் பெண்கள், 22 தாய்லாந்துப் பெண்கள், நான்கு மியன்மார் பெண்கள், 3 இந்தோனேசியப் பெண்கள், 5 லாவோஸ் நாட்டுப் பெண்கள், 6 சீன நாட்டுப்பெண்கள் என்று கமிஷனர் டத்தோ குமார் பட்டியலிட்டார்.








