ஷா ஆலாம், மார்ச்.02-
ரவாங் கோயில் விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த புகார்களின் அடிப்படையில், சமூக ஆர்வலர் அருண் துரைசாமியை அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அருண் துரைசாமிக்கு எதிராக மொத்தம் எட்டு புகார்கள் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தினார்.
இன்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அருண் துரைசாமி வெளியிட்ட கருத்துக்கள் அதிருப்தி அளிப்பதாக இந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கு Refer Other Report அடிப்படையில், ஏற்கனவே குறிப்பிட்ட கோயில் விவகாரம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட தொடக்கக் கால விசாரணை அறிக்கையுடன் இணைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யாயாசான் குப்ரா (Yayasan Kubra) அமைப்புக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக, அருண் துரைசாமி வெளியிட்ட கருத்துக்கள் இன மற்றும் மத ரீதியாகத் தூண்டுதல் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் புகார்தாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25-ஆம் தேதி வரையிலான புகார்களின் அடிப்படையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்று டத்தோ ஷாஸெலி கஹார் மேலும் தெரிவித்தார்.








