கோலாலம்பூர், டிச.14-
கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையைவிட்டு விலகி, எல்.ஆர்.டி. ரயில் தூணில் மோதி, தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் அதன் ஓட்டுநர் கருகி மாண்ட நிலையில், அந்தக் காரின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருனிஸாம் ஜப்பார் தெரிவித்தார்.
காரின் உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்றைய தினம் அந்தக் காரை பயன்படுத்தியவர் தமது மகன் என்பதை அவர் உறுதி செய்துள்ளதாக ஏசிபி ஷாருனிஸாம் குறிப்பிட்டார்.
எனினும் டிஎன்ஏ மரபணு பரிசோதனை முடிவடையும் வரையில் கருகி மாண்ட நபரின் அடையாளத்தை வெளியிட இயலாது என்று அவர் மேலும் கூறினார்.








