புத்ராஜெயா, ஜூன்.16-
கடந்த 2016 ஆம் ஆண்டு ஓர் இந்தியப் பிரஜைக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் லோரி ஓட்டுநருக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டின் கீழ் 18 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ள சிரம்பான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறைபாடுகள் இல்லை என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஸபாரியா முகமட் யூசோஃப் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஆர். காமராஜின் விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சிரம்பான், செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 39 வயது எம். செல்வம் என்பவருக்கு மரணம் விளைவித்ததாகக் காமராஜ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் காமராஜ்ஜுடன் எஸ். குமரவேலன் மற்றும் பி. தனபாலன் ஆகியோர் கூட்டாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். இதில் இவ்வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே 42 வயது தனபாலன் காலமானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








