ஒரே குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த தமது கட்சிக்காரரும் சமூக ஆர்வலர் ஒருவரும் வெவ்வேறு மாதிரி நடத்தப்பட்ட விதம் குறித்து சர்ச்சைக்குரிய சமய போதகர் முகமது ஜம்ரி வினோத்தின் வழக்கறிஞர் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு காவல் துறையால் கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அதற்கு மாறாக அருமுகம் துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட அருண் துரைசாமி எந்தக் காவல்துறைப் பாதுகாப்புப் இல்லாமல் கைவிலங்குகள் இன்றி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது ஏன் என ஜம்ரியின் வழக்கறிஞர் முகமது ஹரிஸ் முகமது யூசோப் வினவினார்.
இரு நபர்களும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். மற்றொரு நபருடன் துணை அமைச்சர் ஒருவரும் உடன் வந்திருந்தார் என்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் சுட்டிக் காட்டினார்.
எனது கட்சிக்காரர் பதிவேற்றிய உள்ளடக்கம், கோலாலம்பூர், சோகோவில் நடைபெறவிருந்த ஒரு கூட்டத்திற்கான அறிவிப்புக் கடிதம் தொடர்புடையது. டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பேரணி அமைதியாகவும் சட்டத்திற்கு இணங்கவும் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், எங்கள் கட்சிக்காரர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர் அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என முகமது ஹரிஸ் தெரிவித்தார்.
முன்னதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்ரி, தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில், அவர் 4,500 ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்காக நீதிமன்றம் ஏப்ரல் 29-ஐ நிர்ணயித்துள்ளது.








