கோலாலம்பூர், பிப்ரவரி.23-
வலுவடைந்து வரும் மலேசிய ரிங்கிட் மற்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையையும், சீர்திருத்தப் போக்கையும் பிரதிபலிக்கின்றன என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், பங்சார், ஜாலான் தெலாவியில் உள்ள ரமலான் சந்தையில் 200 நோன்பு திறப்புப் பொதிகளை விநியோகித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபாமி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.88 என்ற அளவிலும், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.07 என்ற அளவிலும் ஒரு கட்டத்தில் வலுவடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.
பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் - அரசு வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பது ஆகிய இரண்டு முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப் பிரிவுக்காக கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் இது சாத்தியமாகியுள்ளது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.








