பேரா மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான முருகன் மாநாட்டை நடத்தவிருக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனின் முன்னெடுப்பை வரவேற்று, பாராட்டுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இன்று புந்தோங் சுங்கைபாரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் டத்தோ சிவநேசனுடன் இணைந்து கலந்து கொண்ட டத்தோஸ்ரீ சரவணன், மாநில அரசாங்கமே இந்த முருகன் மாநாட்டை ஏற்று நடத்துவது வரலாற்று சாதனையாகும் என்றார்.
சமய அறிவை இளையோர்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் ஆலயங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய டத்தோஸ்ரீ எம். சரவணன், இன்றைய நவீன சூழலில் இளைஞர்கள் ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிவிடாமல் இருக்க ஆலய நிர்வாகங்கள் சிறப்புப் பயிலரங்குகளையும் சமய வகுப்புகளையும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், பண்பாடும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு இளைய தலைமுறையினரிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஒரே வழி என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








