ஜோகூர், உலு திராமில் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பான் சடங்கிற்காகக் கொண்டு வரப்பட்ட எருமை மாடுகள் முட்டியதில், இரு வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.
நேற்று காலை 10 மணியளவில் கம்போங் தெனாங்கில் நடந்த முதல் சம்பவத்தில், 45 வயது நபர் ஒருவர் எருமை மாட்டால் முட்டப்பட்டு சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அன்றிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது சொஹைமி இஷாக் தெரிவித்தார். அவரது இடது காலில் ஏற்பட்ட இரத்த நாளக் காயம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
அதே நாளில் மதியம் 2 மணியளவில் கம்போங் சுங்கை திராமில் நடந்த மற்றொரு சம்பவத்தில், மேலும் ஒரு 45 வயது உள்ளூர் நபர் எருமை மாடு முட்டியதில் விலா எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவங்களில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை எனப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.








