ஜார்ஜ்டவுன், மார்ச்.02-
பினாங்கு, புலாவ் திக்கூஸ் சந்தை அருகிலுள்ள உணவகம் ஒன்றில் தனது நண்பனை வெட்டியதாகக் கருதப்படும் முதியவர் ஒருவர், இன்று காலை தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இன்று காலை சுமார் 6.30 மணியளவில், தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் புலாவ் திக்கூஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்த 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் தெரிந்த ஒருவரே தன்னை வெட்டியதாகப் புகார் அளித்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காகப் பினாங்கு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காகப் போலீஸ் குழுவினர், காலை 8.05 மணியளவில் Solok Codrington பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றனர். அங்குச் சோதனையிட்ட போது, தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் அந்த வீட்டின் சமையலறையில் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது என்று பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. முதியவரின் மரணத்திற்கான காரணம் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.








