குவாந்தான், மார்ச்.29-
முகநூலில் கண்ட கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரத்தை நம்பி, குவாந்தானைச் சேர்ந்த 61 வயது பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், 38 தவணைகளில் மொத்தம் 337 ஆயிரத்து 457 ரிங்கிட் பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளார். தனது சேமிப்பையும் நகைகளையும் அடகு வைத்துப் திரட்டிய இந்தப் பணத்தை 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றிய நிலையில், ஆதாயத் தொகையை எடுக்க மேலும் பணம் கேட்ட போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இது போன்ற இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் எந்தவொரு பணப் பரிமாற்றத்திற்கு முன்பும் காவற்படையின் 'Semak Mule' இணையதளத்தைப் பயன்படுத்துமாறு பகாங் மாநில காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் அறிவுறுத்தியுள்ளார்.








