சிரம்பான், ஜூலை.12-
பேருந்து ஒன்று, டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் அதில் பயணம் செய்த பயணிகளில் நான்கு பெண்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 243.9 ஆவது கிலோமீட்டரில் சிரம்பானுக்கு அருகில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தீயணைப்பு, மீட்புப் படையினர் அதிகாலை 2.52 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக ரெம்பாவ் தீயணைப்பு நிலைய கமாண்டர் முகமட் காசிம் அரிப்பின் தெரிவித்தார்.
20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு பெண்கள் சொற்ப காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடக்கும் போது அந்த பேருந்தில் 13 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு சிறார் என மொத்தம் 30 பேர் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் ரெம்பாவ், கோத்தா மற்றும் செனாவாங் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 16 வீரர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.








