ஜோகூர், பிப்ரவரி.12-
ஜோகூரில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறையினரும் போலீஸ் துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் 26 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களைக் கண்டறிதல், குடிநுழைவு அனுமதி அட்டைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் விதிமீறும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு காலை 9 மணியளவில் இந்த ஒருங்கிணைந்த சோதனை தொடங்கப்பட்டது.
இதில் 19 முதல் 48 வயதுக்குட்பட்ட 10 மியன்மார் ஆண்கள், 2 பெண்கள், 2 நேப்பாள ஆண்கள், 9 வங்காளதேச ஆண்கள் மற்றும் 3 இந்தோனேசிய பெண்கள் என மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில இயக்குநர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் தெரிவித்தார்.
இவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தங்கியிருந்தது மற்றும் சமூக வருகை அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குடிநுழைவுச் சட்டங்களை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.








