கோலாலம்பூர், மே.18-
மலேசிய தேசிய வங்கியான பேங்க் நெகாரா அறிமுகப்படுத்தியுள்ள 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான SME நிலைப்படுத்தல் நிவாரண வசதியான SME SRF நிதியுதவியைப் பெற, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களான MSME நிறுவனங்கள், மே 15 முதல் இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெறும் MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 3.7 விழுக்காடு வட்டி அல்லது லாப விகிதத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வரை நிதியுதவி பெற முடியும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சரான ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதி உதவித் திட்டமானது, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் பேங்க் ரக்யாட் மற்றும் SME Bank உள்ளிட்ட 18 நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், MSME நிறுவனங்கள் இந்த நிதியுதவியைப் பெற அறிவிக்கப்பட்டுள்ள கால வரையறைக்குள்ளோ அல்லது 5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படும் வரையோ விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு, விரைவாக நிதியுதவி கிடைப்பதை உறுதிச் செய்யுமாறு, நிதி நிறுவனங்களையும் ஸ்டீவன் சிம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிதி நிறுவனங்களானது, நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் MSME நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக மட்டும் கருதாமல், வளர்ச்சிக்கு உதவும் கூட்டாளிகளாகக் கருதி உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேங்க் நெகாராவின் இந்த புதிய 5 பில்லியன் ரிங்கிட் நிதியுடன், SJPP எனப்படும் மலேசிய கடன் உத்தரவாத கூட்டுறவு கழகம் வழங்கும் கூடுதல் 5 பில்லியன் ரிங்கிட் நிதியும் இணைந்ததால், இவ்வாண்டிற்கான MSME துறையின் மொத்த நிதி ஒதுக்கீடு 60 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
இந்த நிதியானது, 2026 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 பில்லியன் நிதியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.








