கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
மகாத்மா காந்தியின் பேரனும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்மோகன் காந்தியுடன், தாம் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆசிய ஜனநாயக மாநாட்டில் ராஜ்மோகன் காந்தியை சந்தித்த நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும் அன்வார் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது மலேசியா–இந்தியா இடையேயான வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது, கல்வி மற்றும் அறிவுசார் ஒத்துழைப்பு, நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு, முதல் காலாண்டில் மலேசியாவுக்கு வருமாறு ராஜ்மோகன் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஜனநாயகம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவம் போன்ற தலைப்புகளில் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் உரையாற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அன்வார் விவரித்துள்ளார்.
அதேவேளையில், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.








