கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-
முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கிளந்தான், குவா முசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்திக்கும் தன்மையிலான வார்த்தைகளை உதிர்த்ததாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் 77 வயதான முகைதீன் யாசினுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீன், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கிளந்தான், குவா முசாங், ஃபெல்டா பேராசு என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் மாமன்னராக மேன்மைத் தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா, பொறுப்பில் இருந்த போது, கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதற்கு போதுமான ஆதரவை கொண்டிருந்த போதிலும் பதவியேற்பதற்கு தாம் இஸ்தானா நெகாராவிற்கு மாமன்னரால் அழைக்கப்படவில்லை என்று முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதாக கூறப்படுகிறது.
முகைதீனின் இந்த பகிரங்க அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பகாங் இஸ்தானா உட்பட நாடு முழுவதும் 29 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
3R என்று சொல்லக்கூடிய, ஆட்சியாளர்கள், இனம் மற்றும் சமயம் தொடர்புடைய விவகாரத்தை முகைதீன் தமது ஊரையில் எழுப்பியதாக கூறப்படுகிறது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தேசநிந்தனை சட்டத்தின் 4 ஆவது பிரிவின் கீழ் முகைதீன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
7 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடை சூழ, காலை 8.43 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த முகைதீன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். இதனை தொடர்ந்து அவருக்கு 5 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை வரும் நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.








