தாப்பா அருகேயுள்ள குனுங் பத்து புத்தே மலையில் மாயமான 49 வயதான ஜஸ்லிந்தா சலுடின், அம்மலையின் உச்சியை அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
மலையின் உச்சிப் பகுதியில், “ஹாஃபிஸ் அம்பிக் காம்பார் அக்கா டே சம்பாய்” அதாவது, ஹபிஸ், படம் எடுத்து நான் உச்சியை அடைந்துவிட்டேன் என்ற வாசகத்தை ஜஸ்லிந்தா எழுதி வைத்திருந்ததாக மலையேற்ற வழிகாட்டி ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.
மலையேற்றத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்லிந்தாவின் கைப்பேசி மின்கலம் காலியானதால், தான் உச்சியை அடைந்ததை தெரிவிக்கவே அவர் அந்தக் குறிப்பை எழுதி வைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 24-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஜஸ்லிந்தா மலை உச்சியை அடைந்திருக்கலாம் என்றும், தான் காலை 10.45 மணியளவில் அங்கு சென்றடைந்து, 11 மணியளவில் அந்த குறிப்பைக் கண்டதாகவும் ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.
என்றாலும், உச்சியை அடைந்த பிறகு அவர் எந்த பாதையில் சென்றார் அல்லது எங்கு சென்றார் என்பதற்கான எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாததால், கடந்த 1 வாரமாக நடைபெற்று வரும் தேடுதல் பணியில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.








