விசாக தினம் மற்றும் மலேசிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நாளை மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு, மலேசியர்களுக்கான இலவச படகு சேவையை, பினாங்கு துறைமுக ஆணையமான எஸ்.பி.பி.பி அறிவித்துள்ளது.
அதன் படி, சுல்தான் அப்துல் ஹலீம் முனையம் மற்றும் ராஜா துன் உடா முனையம் ஆகியவற்றிற்கு இடையில், இருவழிப் பயணங்களும் கட்டணமின்றி வழங்கப்படும் என எஸ்.பி.பி.பி தலைவர் யோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இலவசப் படகுச் சேவைத் திட்டமானது மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவுவதோடு, இரண்டு விடுமுறை நாட்களையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான ஓர் வாய்ப்பினை வழங்கும் என்று தாம் நம்புவதாகவும் யோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.








