சபா, சரவாக் மாநில மக்களுக்கு, சமமான மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய, தமது தலைமையிலான மடானி அரசாங்கம், உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
காமத்தான் மற்றும் காவாய் பண்டிகைகளை முன்னிட்டு அவர் இன்று தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல், தரமான சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இரு மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த மலேசியாவின் பலமானது, ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் பேணுவதில் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அன்வார், காமத்தான் மற்றும் காவாய் பண்டிகைகள் தேசிய நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.








