மலேசிய கடற்படைக் கப்பல்களுக்குத் தேவையான கடற்படை தாக்குதல் ஏவுகணையான என்.எஸ்.எம்-ஐ விநியோகம் செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கான என்.எஸ்.எம் ஏற்றுமதி உரிமத்தை, நோர்வே அரசாங்கம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்ரி-லா உரையாடலில் கலந்துகொள்வதற்காக நடந்த இருதரப்பு சந்திப்பின்போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்யிடம் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாகவும் காலித் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே தயாரிக்கும் அதே வகை ஏவுகணையை அமெரிக்க நிறுவனமும் தயாரித்து வரும் நிலையில், அந்த ஏவுகணைகளை மலேசியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்குமா? என்று தாங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நோர்வேயின் காங்ஸ்பெர்க் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் தயாரிக்கும் நேவல் ஸ்டிரைக் ஏவுகணை அமைப்பை, அமெரிக்கக் கடற்படையும் ஏற்கனவே கொள்முதல் செய்துள்ளது.
மேலும், அமெரிக்கக் கடற்படைப் பிரிவானது, அந்த ஏவுகணைகளின் தரைமட்ட பதிப்பை பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் ரேதியோன் நிறுவனம், காங்ஸ்பெர்க் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணைக்கான ஏவுதளங்களை தயாரித்து வருகின்றது.
அதேவேளையில், தனது விரிவான உற்பத்தி வலையமைப்பைப் பயன்படுத்தி ஏவுகணை மற்றும் அதன் முக்கிய உதிரிபாகங்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








