ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பெக்கோக் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஆசிரியர் தே யோக் ஜியுன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆதரவாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரும் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் வாக்குச் சேகரித்து வருகிறார்.
தொகுதியில் உள்ள வீடமைப்புப்பகுதிகளிலும், ஒதுக்குப்புறமான பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள தே யோக் ஜியுன் தொகுதியின் முன்னேற்றத்திற்காகத் தம்மை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தம்முடைய வாக்குறுதிகளையும் விவரித்து வருகிறார்.
இத்தேர்தலில் தொகுதி மக்கள் தம்மை ஆதரித்து, வெற்றிப் பெறச் செய்வது மூலம் கிராமப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வெகுதூரம் இடம்பெயராமல் இருக்க, பெக்கோக் தொகுதியிலேயே தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கான டி.வி.இ.டி திட்டங்கள், சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புப் பொருத்தத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் உயர் தொழில்நுட்ப உற்பத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாயம் ஆகிய துறைகளில் கால்பதிக்க வழிவகை செய்யப்படும் என்று தே யோக் ஜியுன் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி டி.வி.இ.டி திட்ட வலுப்படுத்துதல் மூலம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். மேலும் கல்விசார் படிப்புகளும் டி.வி.இ.டி கல்வியும் சமமாக வலுப்படுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட திறமைக்கு ஏற்ப சம வாய்ப்புகள் வழங்கப்படும்.
தவிர கிராமப்புறக் கல்வி வளர்ச்சி மற்றும் பெக்கோக் தொகுதியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகத் தனது குரலை மாநில சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய பக்காத்தான் ஹராப்பான் சார்பில் 2 ஆவது எண்ணில் போட்டியிடும் தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு தே யோக் ஜியுன் தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி வாக்காளர்களை மிக உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.








