கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் பகுதியில் நேற்று அதிகாலை டெலிகாம் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் டத்தோ சுலைமான் பகுதியில், நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், இந்த சம்பவம் நடந்ததாகவும், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தின் போது 3 பிஎம்டபிள்யூ கார்களில் வந்த ஐந்து ஆடவர்கள் இச்செயலைப் புரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக டிஎம் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன், இந்த திருட்டால் சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.








