சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழா, நாளை ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 8.45 மணி முதல் 10.00 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
இப்புனித நன்னாளில் ஆலயத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், அனுஷ்லிங்கம், தமிழகத்தின் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வடிவங்களான அஷ்டலிங்கங்கள் மற்றும் மலேசியாவிலேயே முதன்முறையாக ஒன்பது ஆஞ்சநேயர்களை உள்ளடக்கிய நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.
இந்த மகா கும்பாபிஷேகப் பெருவிழாவானது, தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கயிலாய பரம்பரை, கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் மேலான ஆலோசனைகளின்படி பக்திப் பெருக்குடன் நடைபெறவிருக்கிறது.
இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி, இவ்வாலயத்தில் நேற்று மாலை முதற்கால யாகமண்டப பூஜை, ஹோமம், எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன நிகழ்வுகள், தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை முதல் பொதுமக்கள் பங்கேற்கும் எண்ணெய் காப்பு சாத்துதல் வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகளுக்கு நடைபெறும் இந்த ஆன்மீகச் சடங்கில், பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்திருந்து எண்ணெய் காப்பு சாத்தி வழிபட ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.
அதேவேளையில் தமிழகம் மாமல்லப்புரத்தை சேர்ந்த தலைமை ஸ்தபதி பன்சாசரம் கணேசன் தலைமையில் சிலைகளுக்கு கண்திறக்கும் சடங்கும் இன்று நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, அண்ணாமலையானின் திருவருளையும் பரிவார மூர்த்திகளின் மகா ஆசிகளையும் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.











