ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.25-
பினாங்கு, குளுகோர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில், 13 வயது சிறுமி ஒருவர் இன்று காலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பள்ளிச் சீருடை அணிந்திருந்த அந்தச் சிறுமி, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை இன்று காலை 9.20 மணியளவில் கண்ட பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சிறுமிக்கு அருகில் கருப்பு நிறப் பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
அந்த மாணவி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் எவ்வித சந்தேகத்திற்குரிய அம்சங்களும் கண்டறியப்படவில்லை. சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








