
முருகப் பெருமானின் உற்சவ திருநாளான தைப்பூச விழா கொண்டாடப்படுவதற்கு இன்னும் 17 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் RSN ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்கள், பினாங்கு தண்ணீர்மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலதெண்டாயுதப்பாணி திருக்கோயிலின் வளாகத்தை தூய்மைப்படுத்தும் வகையில் துப்புரவு பணியில் நேற்று முழு வீச்சில் ஈடுபட்டனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன், ஆணையர் டத்தோ J. தினகரன் உட்பட இதர ஆணையர்கள் கூட்டுப்பணி வாயிலாக குன்றின் மீது குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமானின் திருத்தலத்தையும், அதன் படிகட்டுகளையும் சுத்தம் செய்யும் பணியை நேற்று ஞாயிற்றுக்கிழமைத் காலையில் தொடங்கினர்.

கடந்த ஆறு ஆண்டு காலமாக பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்துடன் கொண்டிருந்த பிணக்குகளுக்கு முடிவு கட்டி, நகரத்தார் சமூகத்துடன் ஒன்றிணைந்து வரும் தைப்பூச திருவிழாவை ஒற்றுமையாகவும், வெகு சிறப்பாகவும் கொண்டாடுவதற்கு உறுதி பூண்டுள்ள ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், பொது மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு,திருமுருகனின் அந்த பக்தித் தலத்தை தூய்மைப்படுத்திய காட்சி, கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.
தைப்பூசத்தையொட்டி ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் மற்றும் பொது மக்கள் உணவு பொட்டளங்களின் பைகளையும், குளிபான காலி டின்கள், பாட்டில்களை ஆங்காங்கு வீசுவது, எச்சில் துப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ராயர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில் வருடாந்திர தைப்பூச விழாவை கொண்டாடுவதும், ஆலய வளாகத்தின் தூய்மையை காப்பதும் அனைவரின் கூட்டு கடப்பாடாகும் என்பதால் வருகின்ற தைப்பூச விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று ராயர் கேட்டுக்கொண்டார்.








