வெளிநாட்டுக் கொடியின் நிறத்தில் சாயம் பூசப்பட்ட தூண் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, விசாரணை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் புக்கிட் பிந்தாங், ஜாலான் பெராங்கன் பகுதியில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
வைரலான காணொளியில், வங்கதேசக் கொடி போன்ற நிறங்கள் பூசப்பட்ட தூணுக்கு நபர் ஒருவர் மரியாதை செலுத்தியது மலேசியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மலேசியாவில் வெளிநாட்டுக் கொடிகளைப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
புகார்களைத் தொடர்ந்து DBKL அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தியபோது, அத்தகைய தூண் அங்கு காணப்படவில்லை. அது முன்கூட்டியே அகற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இக்குற்றத்திற்கு 6 மாத சிறை அல்லது 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.








