சிரம்பான், பிப்ரவரி.19-
நெகிரி செம்பிலான், பெடாஸ் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 236.9 கிலோமீட்டரில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 30 கிலோ Methamphetamin வகை போதைப்பொருளைக் கடத்திய இரு பால்ய நண்பர்களைப் போலீசார் கைது செய்தனர்.
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் துறைத் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் கூறுகையில், "ஜோகூர், பத்து பஹாட் பகுதியைச் சேர்ந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு சந்தேக நபர்களும், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தெற்கு நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்" என்றார்.
சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்தப் போதைப்பொருட்கள் சிலாங்கூர், பூச்சோங்கில் இருந்து எடுக்கப்பட்டு, தெற்கு மாநிலங்களின் சந்தைக்காகக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
சீனத் தேயிலை பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த 30 கிலோ போதைப்பொருள், சுமார் 30 ஆயிரம் பேர் பயன்படுத்தப் போதுமானது என்று இன்று சிரம்பானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ அல்ஸாஃப்னி தெரிவித்தார்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்தக் காரின் பின்பகுதியில் இந்தப் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கைதானவர்களில் ஒருவர் மெக்கானிக், மற்றொருவர் மீனவர் ஆவார். இவர்கள் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.








