கோலாலம்பூர், நவ. 21-
EKVE எனப்படும் வட கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலைத்திட்ட நிர்மாணிப்பில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான் இன்று தமது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
அந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலை குத்தகையாளர் நிறுவனத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று துணை அமைச்சர் அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, உத்தர பிரதேத்தில் காஸிபாட் - அலிகார்க் மாவட்டங்களுக்கு இடையிலான 100 கிலோ மீட்டர் தூரத்தைக்கொண்ட நெடுஞ்சாலையை 100 மணி நேரத்தில் இந்திய நிறுவனம் நிர்மாணித்து இருப்பதை துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், EKVE வட கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலைத்திட்ட நிர்மாணிப்பு தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன நிலையில் அதன் நிர்மாணிப்புப்பணி இன்னும் முடிவடையவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் அகமட் மஸ்லான் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.








