ஜோகூர் பாரு, பிப்ரவரி.02-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர் அரச குடும்பத்தின் அரிய கலைப்பொருட்கள் மற்றும் பொக்கிஷங்களைக் கண்டு ரசிப்பதற்காக ஜோகூர் பாருவில் உள்ள அபு பக்கர் அரச அருங்காட்சியகத்திற்கு வருகை தந்தார்.
தனது மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட அன்வார், அங்குள்ள சேகரிப்புகள் ஜோகூர் சுல்தானின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
இந்த அருங்காட்சியகம் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் அழகான நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. பாரம்பரியச் சொத்துக்களை மேம்படுத்தவும், மாநிலத்தின் சுற்றுலா ஈர்ப்புகளை வலுப்படுத்தவும் ஜோகூர் அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது அவர்களின் ஜோகூர் வருகை 2026 பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாளத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கும் அதே வேளையில், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மலேசியா வருகை 2026 திட்டத்திற்கு இத்தகைய முயற்சிகள் பெரும் ஆதரவாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் அன்வார், கோலாலம்பூரிலிருந்து கேடிஎம் ரயில் இரயில் சேவையான ETS மூலம் ஜோகூர் பாரு வந்தடைந்தார். தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நேரடியாக ஜோகூர் விலங்கியல் பூங்காவிற்குச் சென்ற அவர், அங்கு பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததுடன், சுமார் ஒரு மணி நேரம் தனது குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட்டார்.








