ஷா ஆலாம், மார்ச்.06-
ஷா ஆலம், செக்ஷன் 13 பகுதியில் இளைஞர் ஒருவரைப் பயமுறுத்தி, அவரது காரிலேயே கடத்திச் சென்று கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களைக் போலீஸ் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சேய் எம்போல் வெளியிட்ட அறிக்கையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத இருவர் வீட்டிற்குள் நுழைந்தாகக் குறிப்பிட்டார்.
இருவரில் ஒருவரிடம் 'பாராங்' கத்தி இருந்தது. சந்தேக நபர்கள் அந்த இளைஞரின் பணப்பை, மடிக்கணினி , கைபேசி மற்றும் வீடு, கார் சாவிகளைப் பறித்துச் சென்றனர்.
கொள்ளையடித்ததோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட இளைஞரை அவரது சொந்த காரிலேயே அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று, கூடுதல் பணம் எடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் போது அங்கு பொதுமக்கள் இருப்பதைக் கண்ட இளைஞர் உதவி கோரி கூச்சலிட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அந்த இளைஞரின் காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.








