கோலாலம்பூர், செப்டம்பர்.30-
அரசாங்கம் அறிவித்திருப்பதைப் போல புடி 95 எனும் சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோலைப் பெறுவதற்கு ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதி, அவர் மலேசியப் பிரஜையாக இருக்க வேண்டும். அதே வேளையில் மலேசியாவின் செல்லத்தக்க வாகனமோட்டும் லைசென்ஸைக் கொண்டு இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக மலேசிய சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே மூலம் போக்குவரத்து அமைச்சு, செல்லத்தக்க வாகனமோட்டும் லைசென்ஸை வைத்திருப்பவர்கள் பற்றிய தரவை நிதி அமைச்சுக்கு வழங்கியிருப்பது வழி புடி 95 திட்டம் வெற்றி பெறுவதற்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
ஜேபிஜே தரவுத் தளத்தின் மதிப்பாய்வின் முடிவுகளின்படி, கிட்டத்தட்ட 17 மில்லியன் புடி 95 பெறுநர்களில் சுமார் 0.88 விழுக்காட்டினர் உண்மையிலேயே சலுகை விலையில் பெட்ரோல் 95 பெட்ரோலைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்கள், தங்களின் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிக்காமல், இன்னமும், பழைய அடையாள கார்டு எண்ணிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் புடி 95 பெட்ரோலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.








