கோலாலம்பூர், டிச. 12-
அம்இஸ்லாமிக் வங்கியில் தனது சொந்த கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம், சவூதி அரச பேராளரிடமிருந்து நன்கொடையாகப் பெற்றதாகும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
சவூதி அரேபியா ஆட்சியாளர் காலஞ்சென்ற ராஜா அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அல் சாவுட்டிடமிருந்து அந்த நன்கொடைப் பணம் பெறப்பட்டதாக நஜீப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அந்த நன்கொடை நியாயமான வழியில் பெறப்பட்டதாகும். அந்த நன்கொடை தொடர்பில் தாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் மீண்டும் தற்காப்பதாக தனக்கு எதிராக நடைபெற்று வரும் 1MDB நிதி நிறுவன குற்றவியல் வழக்கில் எதிர்வாதத்தின் போது நஜீப் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.








