புத்ராஜெயா, ஜனவரி.20-
மங்கோலியப் பிரஜையான அல்தாந்துயா ஷாரிபுவின் மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தொகையை, 1.38 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அல்தான்துயாவின் பெற்றோர்களான Shaariibuu Setev மற்றும் Altantsetseg Sanjaa, அவரது மகன் Mungunshagai ஆகியோர், அரசாங்கம், அரசியல் ஆய்வாளர் ராஸாக் பகிண்டா மற்றும் முன்னாள் போலீஸ்காரர்கள் சிருல் அஸார் உமார் மற்றும் அஸிலா ஹாட்ரி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில், 5 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கியதில் உயர் நீதிமன்றம் சட்டத்தில் தவறிழைத்து விட்டதாக, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த நேரத்தில், போலீஸ் அதிகாரிகளான சிருல் மற்றும் அஸிலா ஆகியோர் தங்கள் உத்தியோகபூர்வக் கடமைகளைச் செய்யவில்லை என்ற அடிப்படையில், அவர்களின் செயல்களுக்கு அரசாங்கம் மறைமுகமாகப் பொறுப்பேற்காது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பானது, ஹாஷிம் மற்றும் நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா, கே. முனியாண்டி ஆகியோர் கொண்ட அமர்வால் இன்று வழங்கப்பட்டது.








