செலாயாங் , ஆகஸ்ட் 27-
எட்டு வயது வளர்ப்பு மகளை கொன்றதாக ஓர் ஆடவரும், அந்த சிறுமியின் சொந்த தாயாரான மாது ஒருவரும் செலாயாங் மாஜிஸ்திரேட் நீதீமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
29 வயது முகமது சுல்ஹெல்மி அமிருதீன் மற்றும் அவரின் மனைவியான 30 வயது நோர்பசிரா ராட்ஸி ஆகியோர் இன்று காலையில் மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அத்தம்பதியரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிற்பகல் 3.52 மணியளவில் ரவாங், பந்தர் தாசிக் புத்தேரி -யில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நூர் அனிசா அபிரா முகம்மது ஸுலஹபிஸி என்ற 8 வயது சிறுமியை கொன்றதாக அந்த சிறுமியின் சொந்த தாயாரும், அச்சிறுமியின் வளர்ப்புத் தந்தையும் குற்றங்சாட்டப்பட்டுள்ளனர்.








