Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தேவகி கிருஷ்ணனுக்கு பிரமுகர்கள் தொடர்ந்து இறுதி மரியாதை
தற்போதைய செய்திகள்

தேவகி கிருஷ்ணனுக்கு பிரமுகர்கள் தொடர்ந்து இறுதி மரியாதை

Share:

மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையில் நீண்ட காலமாகவே தம்மை பிணைத்துக்கொண்டவருமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் நல்லுடல் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், ஜாலான் லோக் இயூவில் உள்ள யாழ்ப்பாணத்தவர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாலவில் உள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தேவகி கிருஷ்ணனின் நல்லுடலுக்கு பொது மக்களும். பிரமுகர்களும் தொடர்ந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கூட்டரசுப்பிரதேச முன்னாள் அமைச்சரும், மகளிர் அமைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான ஷாரிசாட் அப்துல் ஜாலில் , முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ S.K. தேவமணி, மஇகா சமூக அறவாரியத்தின் முன்னாள் இயக்குநர் டத்தோ டெனிசன் ஜெயசூரியா உட்பட அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்தும், அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்திட்டும், தமது 100 ஆவது வயதில் காலமான அந்த மூத்த அரசியல்வாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொழில் முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரா. ரமணனின் பாட்டியுமான தேவகி கிருஷ்ணனின் நல்லுடலை தாங்கிய பிரேதப் பெட்டியில் மஇகா மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி தலைமையிலான மகளிர் குழுவினர் மஇகா கொடியைப் போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டில் அன்றைய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைமைத்துவதில் மஇகாவின் மகளிர் பிரிவை உருவாக்கிய பெருமை மறைந்த தேவகி கிருஷ்ணனையே சாரும் என்று மகளிர் பிரிவினர் புகழாஞ்சலி சூட்டினர்.

Related News