இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல மலேசியாவை வழித்தடமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்புகள் அல்லது அப்பாவி மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மலேசியாவைப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மலேசிய சட்டங்களின்படி சோதனை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் இஸ்ரேல் நோக்கிச் சென்ற மூன்று சரக்குக் கொள்கலன்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிலிப்பின்ஸிலிருந்து வந்த மற்றொரு கொள்கலனில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அது தடுத்து வைக்கப்பட்டது.
அதன் இலக்கு இஸ்ரேலின் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் லிமிடட் (Elbit Systems Ltd) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மலேசியாவிற்கு இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நிலையில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களின் ஏற்றுமதியை மூலோபாய வர்த்தகச் சட்டம் 2010 கட்டுப்படுத்துகிறது.








