இன்று செப்டம்பர் 16-ஆம் தேதி, மலேசிய தினத்தை முன்னிட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் அனைத்து மலேசிய மக்களுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், மலேசியா தொடர்ந்து இறைவனின் அருளைப் பெற்று, நீடித்த அமைதியுடன் திகழ வேண்டும் என்றும், அனைத்து விதமான துயரங்கள் மற்றும் சவால்களில் இருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
மேலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு மாமன்னர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் நாட்டின் வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








