கோலாலம்பூர் ஜாலான் கம்போங் பண்டார் டாலாம் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே 3 வாகனங்கள் மீது ஹோண்டா சிவிக் கார் மோதிய சம்பவத்தில், 30 வயது ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் 4 வகையான போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த அவர், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக மாநகர போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் புரோட்டோன் சாகா, நிசான் அல்மேரா, ஹோண்டா சிவிக் ஆகிய 3 வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றை ஓட்டி வந்த 46 வயது அல்ஜீரிய ஆடவர், 46 வயது பெண் மற்றும் 51 வயது பெண் ஆகியோருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவத்தின் காணொளி திரெட்ஸில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட மதுபான சோதனையில் அவர் போதை அருந்தவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் சிறுநீர் பரிசோதனையில் பென்ஸோ, மெத்தாம்பெத்தமின், கெத்தாமின் மற்றும் அம்பெத்தாமின் ஆகிய 4 வகையான போதைப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டம் 1987-ன் பிரிவு 42(1) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








