சிப்பாங் பகுதியில் விமான நிலைய கட்டுமானத் தளம், கிடங்குகள் மற்றும் விமான இன்ஜின் சோதனை நிலையங்களில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 173 ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து ஒரு வாரம் உளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 88 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 261 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில், அதில் 217 வெளிநாட்டினரும் 44 மலேசியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட 173 வெளிநாட்டினரில் 147 பேர் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஆண்கள், 17 பேர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஆண்கள், 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கட்டுமான நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட சில வெளிநாட்டினர், வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தியதும், சமூகப் பயண அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் 5 மலேசியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.








