முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு கோரும் மனு தொடர்பாக, மன்னிப்பு வாரிய உறுப்பினர் என்ற முறையில் தாம் நேர்மையாகவும், மனசாட்சியின் அடிப்படையிலும் தனது கருத்தை தெரிவித்ததாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், அட்டர்னி ஜெனரலின் எழுத்துப்பூர்வ கருத்தை பரிசீலித்த பின்னர், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42-ன் கீழ் மன்னிப்பு வழங்குவது தொடர்பான இறுதி அதிகாரமும் முடிவும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கே உரியது என்றும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நஜிப்பின் மன்னிப்பு மனு தொடர்பான விளக்கங்களை ஹன்னா இயோவிடம் கேட்க வேண்டும் என்றும், தமது அமைச்சு பொதுமன்னிப்பு செயலலகமாக மட்டுமே செயல்படுவதாகவும் சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு மனுவை எதிர்கால கூட்டத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது காஜாங் சிறைச்சாலையில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அவரது 12 ஆண்டு சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமானது, 50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








