பண்டார் உத்தாமா பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட 16 வயது மாணவி யாப் ஷிங் ஸுயெனின் தாயார், தனது மகளின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என சட்டத்துறை அலுவலகமான ஏஜிசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்காக பொதுமக்கள் கையெழுத்திடும் மனுவையும், ஏசிஜி பொது புகார் முறைக்கான இணைப்பையும் தனது முகநூல் பதிவில் வோங் லீ பிங் பகிர்ந்துள்ளார்.
மேலும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வதா, அதை எவ்வாறு முன்னெடுப்பது என்பதற்கான அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இருப்பதால், குடும்பத்தினரின் சட்ட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போது தங்களால் முடிந்தது தங்களது குரலை உயர்த்தி, கவலைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே என வோங் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இவ்வழக்கின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்குமாறு தாங்கள் யாரையும் கேட்கவில்லை என்றும், சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தால் அதை முறையாக பரிசீலித்து, ஒரு மகளை இழந்த தாயின் குரலுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








