காஜாங், பிப்ரவரி.24-
பிரபல ரமலான் சந்தை ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மற்றும் விதிமுறைகளை மீறிய 13 இந்தோனேசியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கி, லாமான் நியாகா கொமுனிடி, செக்ஷன் 13 இல் நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் செயலாக்க துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.
சந்தையில் வெளிநாட்டினரின் ஆதிக்கம் மற்றும் சட்டவிரோத வணிகம் குறித்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது பிடிபட்டவர்கள் அனைவரும் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லோக்மான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவர். மலேசியப் பிரஜைகள் 693 பேர் உட்பட மொத்தம் 720 தனிநபர்களிடம் சோதனையிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முறையான பயண ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது மற்றும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமூக விசா விதிகளுக்குப் புறம்பாக வியாபாரத்தில் ஈடுபட்டது போன்ற காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லோக்மான் விளக்கினார்.








