சொத்துப் பிரகடனம் தொடர்பான வழக்கில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எதிர்கொள்ள இருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபிற்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து தேசிய இருதயக் கழகமான ஐ.ஜே.எனில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த குற்றச்சாட்டு வாசிப்பு ஐ.ஜே.என்னிலேயே நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது.
எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்று வாசிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் டத்தோ அமீர் ஹம்சா அர்ஷாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமீர் ஹம்சா அர்ஷாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான இந்த வழக்கானது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரித்து வரும் சொத்துப் பிரகடனம் தொடர்பானதாகும்.
இதற்கு முன்னர் பலமுறை எஸ்பிஆர்எம்மில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், மேலதிக விசாரணையின் போது 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு நாணயப் பணமும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








