தெமர்லோ, பிப்ரவரி.02-
இன்று திங்கட்கிழமை காலை ஜெராண்டுட்-தெமர்லோ சாலையின் 26-வது கிலோமீட்டர் தூரத்தில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுகாதார உதவி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்ற 43 வயதான சத்தியன் ராஜகோபால் என்பவர், பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முஹமட் நாஷிம் பாஹ்ரொன் தெரிவித்தார்.
இந்த விபத்தில் புரோட்டான் சாகா கார் தவிர, ஒரு டிரெய்லர் லாரி, பெரோடுவா அல்சா மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் ஆகிய நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன.
தெமர்லோவிலிருந்து ஜெராண்டுட் நோக்கிச் சென்ற பெரோடுவா அல்சா கார், கம்போங் டத்தோ ஷாரிஃப் அஹ்மாட் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்புவதற்காக நின்றிருந்தது. அப்போது பின்னால் வந்த டிரெய்லர் அதன் மீது மோதியதில், அந்தக் கார் எதிர் திசைக்குத் தள்ளப்பட்டு புரோட்டான் சாகா காருடன் மோதியது. அதே வேளையில், பின்னால் வந்த டொயோட்டா ஹிலக்ஸ் காரும் புரோட்டான் சாகா மீது மோதியது என்று அவர் விளக்கினார்.
இந்த விபத்தில் பெரோடுவா அல்சா ஓட்டுநரான 42 வயது Agoes Zaid Haritha Mohamad என்பவர் பலத்த காயமடைந்து சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிரெய்லர் ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








